Friday, March 28, 2008

காவியத்தில் இருந்து கணினிக்கு

கணினி (Computer) பயன்படுத்தும் எல்லோருமே எப்போதாவது ஒரு தடவை ட்ரோஜன் (Trojan), ட்ரோஜன் ஹோர்ஸ் (Trojan horse) என்ற வைரஸ் (Virus) பெயாரைப் பார்த்திருப்பீர்கள். இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்? வைரஸை உருவாக்கியவரின் பெயரா? இல்லை, யாராவது அந்தப் பெயரில் வைரஸ் புரோகிறாம் (Virus programme) எழுதினார்களா?


ட்ரோஜன் ஹோர்ஸ் என்பது கிரேக்க காவியம் கணினிக்குத் தந்த பரிசு. ஹோமர் (Homer) என்ற கிரேக்க மகாகவி (நம்ம ஊர் கம்பன் போன்றவர்) படைத்த ‘இலியட்’ என்ற காவியம்தான் இந்தப் பெயருக்கு மூலம். சில வைரஸ்கள் செயல்படும் முறையை ஒத்த அவற்றுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
கிரேக்கர்களுக்கும் ட்ரோய் (Tory) நகரத்தவர்களுக்கும் நடந்த மிகப் பெரிய போரின் இறுதியில் கிரேக்கர்கள் எப்படி வென்றார்கள் என்பதுதான் விசேடம். 24 காண்டங்களைக் கொண்ட அந்தக் காவியத்தை இங்கே சொல்ல முடியாது. ஆனால், ட்ரோஜன் ஹோர்ஸ் என்படும் அந்த விடயத்தை மட்டும் சொல்லாம்.


10 ஆண்டுகளாகத் தொடர்ந்த போரில் கிரேக்கர்களால் வெற்றிபெற முடியவில்லை. இறுதியில் தன்னுடைய மைத்துனனைக் கொன்றான் என்பதற்காக காவிய நாயகனான அக்கிலிஸ் (Achilles - இவனது கோபம், ஆக்ரோஷம், வீரம் இவைதான் இலியட்டின் மையக்கரு. இந்தப் போருக்காகவே இவன் பிறந்தான் என்கிறது காவியம்), ட்ரோய் நகரத்தாரின் முதன்மைத் தளபதி ஹெக்டரைக் கொன்று அவனது உடலைத் தன் தேரில் கட்டி இழுத்துச் சென்றான். மகனின் உடலைப் பெறவரும் தந்தையான ட்ரோய் மன்னர் ப்ரியம் ஹெக்டரின் அடக்கத்தையொட்டி 12 நாள் அமைதி கடைப்பிடிக்க கேட்கிறான், அக்கிலிஸ் சம்மதிக்கிறான்.


12 நாட்கள் கடந்தபோது, கடற்கரையில் முகாமிட்டிருந்த கிரேக்கப் படைகள் மாயமாகிவிட்டன. அவை இருந்த இடத்தில் மரத்தால் செய்யப்பட்ட பெரிய்ய்ய்ய்ய குதிரை ஒன்று எஞ்சி இருக்கிறது. பிளேக் நோய் வந்து கிரேக்கர்கள் மடிந்து போனதால் அவர்கள் திரும்பி விட்டார்கள் என்று ப்ரியமும் அவனது தளபதிகளும் நம்புகின்றனர். ப்ரியமின் இரண்டாவது மகனான இளவரசன் பாரிஸ் (கிரேக்கர்களின் மன்னர் மன்னனான அகமெம்னனின் சகோதரனது மனைவியும் உலகப் பேரழகியுமான ஹெலனை, விருந்துக்குப்போன இடத்தில் காதல் செய்து கடத்திக்கொண்டு வந்துவிட்டதால்தான் இந்தப் போரே ஆரம்பமாகிறது.) தடுத்தும் கேளாமல் மரக்குதிரையை கட்டி இழுத்து கோட்டைக்குள் கொண்டு செல்கின்றனர்.

அந்த பெரிய்ய்ய்ய்ய மரக்குதிரைக்குள் கிரேக்க வீரர்கள் மறைந்திருந்தனர். உண்மையில் அது கிரேக்கர்களின் திட்டம். அவர்களால் ட்ரோய் நகரக் கோட்டை மதில்களை உடைத்து உட்புகமுடியாததால் அவர்கள் இப்படி ஒரு திட்டம் தீட்டினார்கள் குதிரை கோட்டைக்குள் இழுத்து விடப்பட்ட அன்று இரவே அக்கிலிஸ் உட்பட கிரேக்க வீரர்கள் அதிலிருந்து வெளியே வந்து ட்ரோய் நகரைத் தாக்கினார்கள். அதேநேரம் மறைந்திருந்த கிரேக்கப்படைகள் கோட்டைக்கு வெளியே இருந்து தாக்கி நகரைத் தம்வசமாக்கின.


குதிரைக்குள் மறைந்திருந்து சென்று, இரவு வரும்வரை காத்திருந்து பின்னர் கிரேக்கர்கள் தாக்குதல் நடத்திய பாணியில் சில வைரஸ்களும் கணினிக்குள் மறைந்திருந்து நேரம் வரும்போது செயற்படுவதனால் அவற்றை ட்ரோஜன் ஹோர்ஸ் என்கிறார்கள்.


ராமாயணம், மகாபாரதம் போன்று மிகப் பெரிய சிறந்த காவியம் இலியட். ட்ரோய் நகரைத் தாக்க 1000க்கும் மேற்பட்ட கப்பல்களில் கிரேக்கர்கள் வந்தார்கள் என்பது உட்பட அதன் கற்பனை வளம் மிகப் பெரியது. Even Homer nods, apple of discard, Achilles’s heel போன்ற ஆங்கில மரபுத்தொடர்கள் இந்தக் காவியத்தில் இருந்துதான் பிறந்தன என்கிறார்கள். இந்தக் கதை Troy என்ற பெயரில் ஹாலிவூட் படமாகவும் ஹோமரின் இலியட் என்ற பெயரில் தமிழ் புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.

Sunday, March 2, 2008

தே.எண்ணெய் விமானமும் நாங்கள்விட்ட பிழைகளும்

தேங்காய் எண்ணெய்யில் போயிங் விமானம் ஒன்று வெற்றிகரமாகத் தனது பரீட்சார்த்தப் பறப்பை முடித்திருக்கிறது. அண்மையில் ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்த சுற்றுச்சூழல் தொடர்பான செய்தி இது.

வேர்ஜினியா அட்லாண்டிக் என்ற விமான நிறுவனம் (உலகின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்று) இந்தப் பரீட்சார்த்தப் பறப்பை நடத்தியது. போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் ஒன்று லண்டனில் இருந்து பறந்தது. அதிக தூரமில்லாத ஆம்ஸ்ரடாம் விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

தேங்காய் எண்ணெய்யையும் பபாசு (babassu) என்ற மரத்தின் விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய்யையும் கலந்து அதனுடன் வழக்கமாக ஜம்போ ஜெட்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளையும் சேர்த்தது இந்த முயற்சி. இதன் வெற்றி காரணமாக இனிவரும் காலங்களில் விமானங்களில் உயிரிஎரிபொருளை (biofule) அதிகளவில் பயன்படுத்த முடியும் என்பது எதிர்பார்ப்பு. கரியமில வாயுவின் வெளியேற்றத்தைக் குறைத்து பூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இதனை எதிர்ப்போரும் இருக்கிறார்கள். அது வேறு விடயம்.
இந்தச் செய்தியைப் படித்தபோது எனது நினைவுகள் ஒரு தசாப்தம் பின்னோக்கிப் பறந்தன. 1990 முதல் 1995 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கும் வன்னிக்கும் எரிபொருள் வருவது மிகமிகக் குறைவு. பொருளாதாரத் தடை கடுமையாக நடைமுறையில் இருந்தது. அதிலும் பெற்றோல் மருந்து போன்ற பாவனைக்கு மட்டுமே உரியது. மண்ணெண்ணெய்யோ யானை குதிரை விலை. அப்போதெல்லாம் நாங்கள் செய்தவை, இதேபோன்று தேங்காய் எண்ணெய் அல்லது மரக்கறி எண்ணெய்யை மண்ணெண்ணையுடன் கலந்து வாகனங்கள் ஓடியதுதான்.

ஸ்டார்ட் எடுப்பதற்கு மட்டும் இந்த எரிபொருள் கொஞ்சம் பிரச்சினை கொடுக்கும். அதற்காக நாங்கள் டின்னரையோ பெற்றோலையோ கொஞ்சமாக உபயோகித்தோம். ஒரு சூப்பிப் போதலுக்குள் அதை வைத்துக் கொண்டு ஸ்டார்ட்டின் போது மட்டும் வாகனத்தின் எஞ்சின் பகுதிக்குக் காட்டி (குதிரைக்கு காரட் கட்டியது போன்று) ஸ்டார்ட் செய்வோம். எரிபற்று நிலையைப் பெற்றதும் (அதற்கு மட்டும்தான் பெற்றோல் அல்லது டின்னர் தேவை) கலப்பு எரிபொருளிலேயே வண்டி ஓட ஆரம்பித்துவிடும்.
பெரிய சத்தமும் அதிக புகையும்தான் இதனால் ஏற்படும் பெரிய பிரச்சினைகளாக அப்போது எம்மால் இனங்காணப்பட்டன. 1995 வரைக்கும் இந்த நிலை தொடர்ந்தது. (இதை மிகப் பெரிய அவல நிலை என்று நாங்கள் அப்போது நினைத்தோம் என்பது வேறு விடயம்) அதன் பின்னர் பெற்றோல் கிடைக்க ஆரம்பித்ததும் இதையெல்லாம் கைவிட்டு நாங்கள் மறுபடி கரியமில வாயுவை உற்பத்தி செய்யும் எங்கள் பொன்னான பணிக்குத் திரும்பி விட்டோம். இப்போதும் அதைத் தொடர்ந்தபடிதான் எம் பயணம்.

அந்த 5 வருட காலப்பகுதியில் தேங்காய் எண்ணையில் வாகனங்கள் (குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள்) ஓடியபோது அவை கக்கிய புகை கண்டு இவற்றால் சூழலுக்குப் பெரும் கேடு என்றுதான் எல்லோருமே நினைத்தோம். அப்போதெல்லாம் இது சுற்றுச் சூழலுக்குப் பயனள்ளது, கரியமில வாயுவின் தாக்கத்தை குறைக்கும் நல்ல செயல் என்று எங்களுக்குச் சொல்லித்தர யாரும் இருக்கவில்லை. நாட்டுக்கும் பூமிக்கும் ஏதோ கெடுதல் செய்வதாக நினைத்துக் கொண்டிருந்ததால் 1995இல் அந்தப் வெற்றிகரமான பரீட்சார்த்தங்களை எல்லாம் விட்டுவிட்டு நாங்கள் மறுபடி பெற்றோலுக்குப் போய்விட்டோம்.

இப்போது 13 வருடங்கள் கழிந்து, அதே தேங்காய் எண்ணெய்யிலும் மரக்கறி எண்ணெய்யிலும் விமானங்கள் பறக்கின்றன. அது சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானது என்கிறார்கள். பெற்றொலுக்கும் சுப்பர் பெற்றோலுக்கும் ஒரு மாற்று என்கிறார்கள். உயிரி எரிபொருள் என்கிறார்கள்.

.......நாங்கள் செய்தவைகளையும் செய்து கொண்டிருப்பவைகளையும் நினைக்க எங்கே போய் தலையை முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை எனக்கு. போர் வெறுமனே அழிவுகளை மட்டுமல்ல நல்ல சில (கவனமாகப் படியுங்கள் சில) விடயங்களையும் எங்களுக்குக் கற்றுத்தந்தது. நாம் அவற்றைக்கூட இழந்து விட்டோமோ.....?

புதிய அறிமுகம்

இறுவட்டு அல்லது குறுந்தகடுகளைப் (CD) பயன்படுத்தும் கார் ஸ்ரியோ பிளேயர்களை car stereo receiver இனி மறந்து விடுங்கள். சிடிக்களைப் காவுவதும் அவற்றைப் பாதுகாத்து வைத்திருப்பதும் சிரமம் பிடித்த வேலையாக இருந்தால் இனி அது அவ்வாறு இருக்கப் போவதில்லை. உங்களுக்காகவே வந்துவிட்டது மெமரி கார்டுகளைப் (SD/MMC memory card) பயன்படுத்தும் கார் ஸ்ரீரியோ பிளேயர்கள். ஜேர்மன் நாட்டு நிறுவனம் ஒன்று இந்த புதிய பிளேயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் சிடி போடுவதற்கான இடமே இல்லை. மெமரி கார்டுகளை உள்நுழைக்கக் கூடிய இடம் மட்டுமே இருக்கிறது. MP3, WMA போன்ற பைல்களில் உள்ள பாடல்களை இதில் நீங்கள் கேட்டு மகிழலாம். உங்களிடம் உள்ள மெமரி கார்டின் கொள்ளவிற்கேற்ப எவ்வளவு பாடல்களை வேண்டுமானாலும் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

வரவர சிடிக்களை மக்கள் விரும்புவது குறைந்து கொண்டே வருவதால் இந்த புதிய தயாரிப்பிற்குத் தாங்கள் தாவிவிட்டனர் என்று இதனை அறிமுகப்படுத்திய நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்திருக்கிறார். இணையத்தினது பாவனை அதிகரித்த பின்னர் பாடல்களை அதிலிருந்தே வாங்கிவிடுகிறார்கள் அல்லது பதிவிறக்கம் செய்து விடுகிறார்கள். ஐபோட் மற்றும் எம்பி3 பிளேயர்களின் பாவனையும் வேகமாக ஆக்கிரமித்துச் செல்கிறது. இதனால் புதிய அறிமுத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்பது அவரது நம்பிக்கை.

எம்பி3 பிளேயர்களை பொருத்தி இந்த புதிய ஸ்ரியோவில் பாடல்களைக் கேட்கலாம் என்பது இதன் மற்றுமோர் விசேடம். கைப்பேசிகளுடன் இணைத்தும் பயன்படுத்த முடியுமாம் இதனை. 3.5எம்எம் ஆடியோ பிளக்குக்குப் பொருந்தக்கூடிய எதனையும் இதனுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். இப்போதைக்கு புதிய Blaupunkt Melbourne SD27வின் விலை 160 டாலர்கள்.

காசட்டுக்கள் போய் சிடி வந்தது. இப்போது அதுவும் போய் மெமரி கார்டுகளின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்தாகி விட்டது. இன்னும் கொஞ்சக் காலத்தில் வெறும் நூலிலை சாதனங்கள் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் தொழில்நுட்பத்தின் வேகம் அப்படி.

பனி(!) மனிதன்

கொஞ்சம் பனி கொட்டினாலே இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிடும் நம் மத்தியில் இந்த மனிதர் முழு பனிக்கட்டிகளுக்குள்ளே ஒரு மணி நேரத்திற்கு மேலாக உட்கார்ந்திருந்து சாதனை படைத்திருக்கிறார். பனி மனிதன் ('The Iceman) என்று செல்லமாக அழைக்கப்படும் விம் ஹொவ் (Wim Hof) நெதர்லாந்து நாட்டுக்காரர். ஜனவரி 26ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள ரொபின் அரும்பொருட்காட்சியகத்தின் முன்னால் தன்னுடைய முன்னைய சாதனையை முறியடித்து ஒரு மணி 12 நிமிடங்கள் பனிக்கட்டிகளுக்குள்ளேயே அமர்ந்திருந்திருக்கிறார் இந்த மனிதர்.
தனது உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தி வைத்திருக்கக் கூடிய மந்திர தந்திரங்களை கற்றிந்து வைத்திருப்பதால் அவருக்கு இந்த சாதனை கைவந்திருக்கிறது. திபெத்தியர் அல்லாமல் இந்தக் கலை கைவரப்பெற்ற ஒரேயொரு வேற்றுநாட்டவர் இவர்தானாம்.

அழகிய செஸ் மகன்

கேரளா நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது ரயில். அருகே அமர்ந்திருக்கும் இளைஞருடன் பேச்சுக் கொடுக்கிறார் ஒரு முதியவர்.
“என்னப்பா பண்ணிட்டிருக்க?”

“செஸ் ஆடிட்டிருக்கேங்க”

“நா அதக் கேக்கல. நீ என்ன தொழில் பண்ணின்டிருக்கேன்னேன்.”

“இல்லீங்க நான் முழு நேரமா செஸ் தான் ஆடின்டிருக்கேன். என்னோட தொழிலே அதுதாங்க”

பெரியவரின் முகத்தில் ஒரு ஆதங்கம். என்ன இந்தப் பையன் இந்தச் சின்ன வயதில் வீணாப்போகிறானே என்று. என்ன நினைத்தாரோ தெரியாது அவனுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.

“செஸ் எல்லாம் சரிவராதுப்பா. ஆனந்து மாதிரி இருந்தா அதெல்லாம் வேலைக்கு ஆவும். உனக்கு அதெல்லாம் சரிவராது. நீ வேறயேதாச்சும் தொழில் கத்துக்கோ. அதுதான் உன் வாழ்க்கைக்கு உதவாது.”

அழகான புன்சிரிப்புடன் இந்தச் சம்பவத்தை விவரிக்கிறார், இன்றைய உலகின் சதுரங்க வாகையர் (சாம்பியன்) விஸ்வநாதன் ஆனந்த். “அந்தப் பெரியவர் அந்த மாதிரிச் சொன்னதும் எனக்கு மனசே வரல்ல நான்தான் ஆனந்துன்னு சொல்லிக்க” என்கிறார் அவர். தனக்குக் கிடைத்த எல்லா அங்கீகாரங்களைவிடவும் மிக உயர்வானதாக இந்த விடயத்தைப் பார்க்கிறார் ஆனந்த்.

மெக்ஸிக்கோவில் நடந்த உலக சதுரங்கப் போட்டியில் வாகைசூடியதுடன் சதுரங்க உலகின் முதல் நபராகவும் முன்னேறியுள்ளார் விஸ்வநாதன் ஆனந்த். ஒரே ஆண்டில் கிடைத்த இரட்டை வெற்றிகளின் பூரிப்பு முகத்தில் தெரிய, தான் வாங்கியுள்ள புதிய வீட்டில் எம்மைச் சந்தித்தார். அழகான பிரமிப்பூட்டும் வீடு. அண்மையில்தான் அங்கு குடிபோயிருக்கிறார்கள். தனது வெற்றி, சாதாரண வாழ்க்கை, தற்போது வசித்து வரும் ஸ்பெயின் நாட்டில் கிடைத்த அனுபவம், தன்னுடைய ரசனைகள் என்று எம்முடன் அனைத்தையும் பகிர்ந்துகொண்டார்.

உலக வாகையர் பட்டம் வென்ற பின்னர் இந்தியா திரும்பிய ஆனந்திற்கு புதுடில்லியிலும் சென்னையிலும் மிகப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்திருந்ததற்கும் மேலேயே கிடைத்த வரவேற்பால் நெகிழ்ந்து போயிருக்கிறார் அவர். “விமான நிலையத்திற்கு வருவார்கள் என்பது தெரியும். ஆனாலும் இவ்வளவு பெரியளவிலான வரவேற்பை எதிர்பார்க்கவேயில்லை. டில்லியில் அவ்வளவு பேர் பின்னர் ஜனாதிபதியுடனான சந்திப்பு எல்லாத்துக்கும் மேலாக சென்னையின் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு, அதிலும் நிறையக் குழந்தைகள் விமான நிலையத்திற்கே வந்திருந்தது எல்லாம் அற்புதமானவை. என்னுடைய வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத அனுபவம் அது.”

“உலக சதுரங்கப் போட்டி அனுபவம் எப்படி?”

“இம்முறை எப்படியும் பட்டம் வென்றுவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இதற்காக மே மாதத்தில் ஒரு தீவிர பயிற்சி முடித்திருந்தேன். இங்கே சென்னையில்தான் அது நடத்தினேன். நிறைய நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுடனும் இணையத்தின் மூலம் பலருடனும் ஆடி நன்றாகப் பயிற்சி செய்து கொண்டேன். எப்படியும் வென்றுவிட வேண்டும் என்பதற்காக எனது 100 வீத திறமையையும் கொட்டிவிடுவது என்று தீர்மானித்திருந்தேன்.

எப்போதும் அப்படிச் செய்து கொண்டிருக்க முடியாது. இனி ஒரு முறை அப்படிச் செய்ய முடியுமா என்று கேட்டால் அதுவும் சந்தேகம்தான். நான் நல்ல திறனில் இருந்ததால் இம்முறை எல்லாவற்றையும் கொட்டிவிடுவது என்றிருந்தேன். ஆசை இருந்தது. அது நிறைவேறியது.

ஆனால், சதுரங்க உலகில் முதிலிடம் என்பது எதிர்பார்க்காத ஒன்று. போட்டி தொடங்கும் போது நான் 15 புள்ளிகள் வரை பின்தங்கியிருந்தேன். ஒரே போட்டியில் அவற்றைத் தாண்டி முதிலிடம் என்பது நினைத்தும் பார்க்க முடியாதது. ஆனால் அது நடந்துவிட்டது. மெக்ஸிக்கோ போட்டியை வெல்வதே பெரிசுன்னு நினைச்சேன். ஆனால் முதலிடம் என்பதும் ஒரே வருடத்தில் கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி.”

ஆனந்தினுடைய முதல் குரு அவரது தயார் சுசீலா விஸ்வநாதன். அவர்தான் முதன் முதலில் சதுரங்கத்தை ஆனந்திற்குப் பழக்கி விட்டவர். அது பற்றி சொல்லும் போது ஆனந்தின் முகத்தில் இளைமைக் காலம் நிலழாடுகிறது.
“என்னுடைய மூத்த சகோதரர்களுக்கு (அண்ணா மற்றும் அக்கா) சதுரங்கம் ஆடிக்கொண்டிருப்பார்கள். அதைப் பார்த்துவிட்டு எனக்கும் பழக்கி விடுங்கள் என்று அம்மாவிடம் போய்க் கேட்டேன். சின்னப் பையனாக இருந்தாலும் அம்மா சொல்லிக் கொடுத்ததும் உடனே பிடித்துக்கொண்டேன். அதனால இவனுக்கு நல்லா ஆட வருங்கிறது அம்மாக்குப் புரிஞ்சுது. நிறைய செஸ் புத்தகங்களெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. ரஷ்ய நிலையத்தில் இருந்த 'செஸ் கிளப்'பில சேர்த்து விட்டாங்க.

ஒரு முறை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா போயிருந்தப்ப அங்க தொலைக்காட்சில செஸ் போட்டி ஒண்ணு நடத்திட்டிருந்தாங்க. நிகழ்ச்சி இறுதியில ஏதாவது ஒரு சொடுக்கு மாதிரி வைப்பாங்க. அதுக்கு நாம பதில் எழுதிப் போடணும். வெல்றவங்களுக்கு ஒரு செஸ் புத்தகம் வாராவாரம் பரிசளிச்சாங்க. நான் 10 புத்தகம் வாங்கினேன். அப்புறம் என்னை அவங்க அலுவலகத்துக்குக் கூப்பிட்டாங்க. பெரிய செஸ் புத்தகம் ஒண்ணு குடுத்தாங்க. ஆனா, இதோட நிறுத்திக்கோ, இனிமே போட்டில கலந்துக்காத, நிறைய நீ ஜெயிச்சுட்டேன்னாங்க. அப்பெல்லாம் நான் வெளியே எங்காவது போயிட்டா அம்மா அந்தத் தொலைக்காட்சியப் பாத்து அதில செஸ் பத்தி என்னென்ன சொல்லறாங்களோ அதயெல்லாம் குறிப்பெடுத்து வச்சு நான் வந்ததும் தருவாங்க. அன்னைக்கின்னு இல்ல இன்னிக்கு வரைக்கும் என்னோட அப்பாவும் அம்மாவும் எனக்கு நிறைய ஊக்கம் தந்துகிட்டேதான் இருக்காங்க.
எனக்குத் திருமணம் ஆனப்போ என்னோட நண்பர்கள் எல்லாம், ‘இனி உன்னோட திறமை கொஞ்சம் கொஞ்சமா மழுங்கிடுன்னு’ சொன்னாங்க. ஆனா அதுக்குப் பிறகுதான் நான் உலக வாகையர் பட்டம் வென்றிருக்கிறேன். என் மனைவி எனக்கு முழுக்க முழுக்க துணையா இருக்காங்க.”

விஸ்வநாதன் ஆனந்த் இரண்டு தடவை சதுரங்க உலக வாகையர் பட்டம் வென்றிருக்கிறார். 2000ஆம் ஆண்டில் முதல் தடவையாக அவர் அதனை வென்றார். இப்போது இரண்டாவது தடவையாக வென்றிருக்கிறார். இந்த வெற்றிகள் இந்தியாவில் சதுரங்க ஆட்டம் பிரபலமடைவதற்கு, குறிப்பாகச் சிறுவர்களிடம் பிரபலமடைவதற்கு ஏதுவாக இருக்கின்றது. அவரது கையெழுத்தைப் பெறுவதற்காக நிறையச் சிறுவர்கள் அவரது அப்பாவிடம் தமது பயிற்சிப் புத்தகங்களை நாம் அங்கு இருக்கும் போதே கொடுத்துச் சென்றார்கள். அந்தளவிற்கு அவர்களுக்கு ஆனந்த் ஒரு தூண்டியாக இருக்கிறார். அப்படி இருப்பது எப்படி இருக்கிறது ஆனந்திற்கு?
“நான் செஸ் ஆட வந்தப்போ பொபி பிஷர், மைக்கல் டாட் எல்லாம் எனக்குத் தூண்டியாக இருந்தாங்க. இப்போ சிறுவர்களுக்கு நான் அந்த மாதிரி இருக்கிறேன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தியாவில இப்ப செஸ் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கு. ஆனா இதுபோதாது இன்னும் நிறைய வளரணும்.”

சதுரங்க ஆட்டத்திற்காக ஆனந்த் உலகம் முழுவதும் சுற்றித் திரிய வேண்டியிருக்கிறது. அதிகமான ஆட்டங்கள் ஐரோப்பிய நாடுகளிலேயே இடம்பெறுவதால் இந்தியாவில் இருந்து அங்கே அடிக்கடி சென்று வருவது அவருக்குச் சிரமமாக இருக்கிறது. இதனால் சுவிஸிலேயே ஒரு வீடு வாங்கி கடந்த சில வருடங்களாக அவர் அங்கேதான் தங்கியிருக்கிறார். "ஆனா, எப்பிடியும் வருடத்தில இரண்டு தடவையாவது இந்தியா வந்திடுவேன். இப்போ புது வீடு வாங்கியிருக்கிறதால இன்னும் நிறைய நேரம் இங்க இருக்க முடியுன்னு நினைக்கிறேன். முந்தியப் போல இல்ல, இப்ப இணையம் மூலமாவே செஸ் பயிற்சிகள்ள விளையாட முடியும். அதுக்காக ஐரோப்பா போகணுன்னு அவசியமெதுவுமில்ல." என்கிறார் புன்சிரிப்புடன்.

"சுவிஸ் எனக்கு பிரச்சினையா இருக்கவேயில்ல. போனதுமே நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. இரண்டு வருசத்துக்குப் பிறகுதான் முதல் நண்பனயே கண்டேன் என்கிற மாதிரியான அனுபவங்கள் எதுவும் எனக்குக் கிடையாது. அங்க என்னால இயல்பாவே இருக்க பழக முடிஞ்சுது. ஸ்பானிஷ் கூட நல்லாவே பேசுவேன்.”

இந்த அழகிய செஸ் மகனுக்கு இசை பிடிக்கும். 'அஸ்ரோலஜி' ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ராத்திரி நேரம் கிடைத்தால் வெளியே வந்து அரை மணி நேரம் நட்சத்திரங்களைப் பார்த்துட்டே இருக்கிறது அவருக்கு ரொம்பப் பிடித்த பொழுது போக்கு. நடனம் தெரியும். கொஞ்சம் சமையல் செய்யவும் பிடிக்கம். ஆனா ஒரேயொரு பிரச்சினை, சமையல் குறிப்புக்களில் எதைச் சொல்கிறார்களோ அதை அப்படியே பின்பற்றுவதுதான்.
இன்னும் நாலைந்து வருடங்களுக்குள் சதுரங்கத்தை ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றாகச் சேர்த்து விட்டார்களானால் அதில் கலந்து கொண்டு இந்தியாவிற்குத் தங்கம் வென்று தருவதற்கு ஆர்வமாக இருக்கிறார் ஆனந்த். "நிச்சயம் வெல்லான்னு சொல்ல முடியாது. அனா முயற்சி செய்யலாம்" என்னும் அவரது கனவு விரைவில் நனவாகட்டும்.

நினைச்சே பார்க்கல...
(அம்மாவின் பகிர்வு)

அவன் சாதாரண குழந்தையாத்தான் இருந்தான். அவனுக்கு செஸ் கத்துக்கொடுத்தப்போ இந்த மாதிரி பெரிய பெரிய பட்டங்கள் எல்லாம் வெல்லுவான்னு நான் நினைச்சும் பார்த்ததில்ல. ஆர்வமா இருந்தான் அதனால கத்துக்கொடுத்தேன். சீக்கிரம் கத்துண்டான். பின்ன அதிலயே ஊக்குவித்தோம்.

மத்தக் குழந்தைகளுக்கும் அவனுக்கும் 11 வயது வித்தியாசம். அதனால் எல்லாரும் அவன்ல ரொம்பப் பாசமாவும் செல்லமாவும்தான் இருப்போம். அவனோட எல்லா வளர்ச்சியையும் அருகில இருந்து கவனிச்சுக்கவும் முடிஞ்சுது. அவன் முதல் தடவை உலக வாகையர் பட்டம் பெற்றப்போ, மற்றவா விட்ட பிழைகள் வேறு சூழ்நிலைகளால அந்த வெற்றி அமைஞ்சதாக்கூடக் கருதிக்கலாம். ஆனா இரண்டாவது தடவை வென்றபோது அது அவனோட திறமையால மட்டும்தாங்கிறது ஏற்றுக்கத்தான் வேணும்.
எத்தின பட்டம் வாங்கினாலும் இன்னிக்கும் என் மகனாதான் இருக்கான். கொஞ்சம்கூட மாறல. இருந்தாலும் சதுரங்க உலகின் முதல் மகன் என்ற வகையில அவனுக்கு இப்ப பொறுப்புக்கள் கூடியிருக்கிறதாதான் நான் நினைக்கிறேன்.

ஆனந்த் ஓர் அபூர்வம்!
(மனைவியின் குழைவு)

மெக்ஸிக்கோ போட்டியப்போ ஆனந்த் ஆரம்பத்திலேயே ரொம்ப வேகமா ஆடி ஜெயிச்சார். அதனால அவர் ரொம்ப நல்ல திறனோட இருக்கிறார்ங்கிறது தெரிஞ்சுடுத்து. இந்த முறை பட்டம் வென்றிடுவார்ங்கிற நம்பிக்கையும் இருந்தது. ஆனாலும் இறுதி ஆட்டத்தப்போ வழமை மாதிரி இல்லாம ரொம்பக் கவனமா ஆடுங்க, நல்லா யோசிச்சு ஒவ்வொரு நகர்வையும் பண்ணுங்கன்னு நாங்கெல்லாம் யோசனை கூறினோம். ஆனா இறுதி ஆட்டத்தப்போவும் ஆனந்த் வழக்கம்போல வேகமாத்தான் ஆடினார். அவர் ஆடிற வேகத்தப் பாத்து எங்களுக்கெல்லாம் ஒரே பதற்றம். ஏன்னா ஏதாவது ஒரு நகர்வு தப்பானாக்கூட அவ்வளவு நாளும் பட்ட கஷ்டங்களும் வீணாயிடுமே!
ஆனாக் கடைசில ஆனந்த் வென்றிட்டார். அவரோட அந்த வேகமான நகர்வுகள்தான் சில வேளைகளில வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்குமோன்னு இப்ப தோணுது. இருந்தாலும் அப்ப ரொம்பப் பதற்றமாதான் இருந்தது.

ஆனந்த் ரொம்ப அமைதி, நல்ல குணம். பழகிறத்துக்கு ரொம்ப இனிமையானவர். அவர் அப்படி இருக்கிறதாலதான் வெற்றியாளராவும் இருக்காறா அல்லது வெற்றியாளரா இருக்கிறதாலதான் அப்படி இருக்காறாங்கறது தெரியலை. என்னோட கணவர்ங்கிறத்துக்காகச் சொல்லல உண்மையிலேயே இப்படிப்பட்ட மனிதர்களப் பாக்கிறது ரொம்ப அபூர்வம். ஆனந்த் அப்படிப்பட்ட ஒருவர்.

நாடில்லா இளவரசர்: கவலையோ வேறு!

பொழுது போகாமல் இணையத்தில் கிளறிக்கொண் டிருந்தேன். யாழ்ப்பாணம் பற்றி கிண்டிக்கொண்டிருந்த போது ஒரு தளம் என்னை மிகவும் கவர்ந்தது. யாழ்ப்பாணத்து மன்னர் பரம்பரையில் வந்தவர் என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள ஒருவரது இணையத் தளம் அது. நெதர்லாந்தில் இருக்கும் ரெமீஜியஸ் கனகராஜா என்பவருக்கு உரியது அத்தளம். அவர் மன்னர் பரம்பரையின் உண்மையான வாரிசா இல்லையா என்பதெல்லாம் இங்கு என் விவாதத்திற்குரிய விடயமல்ல. எழுத்தாளர் கலாநிதி குணராசா ஒருமுறை இப்படி மன்னர் வாரிசைப் பற்றி எழுதி செமத்தியாக வாங்கிக்கட்டிக்கொண்டார் என்பது என் பழைய ஞாபகங்களில் ஒன்று. நான் சொல்ல வந்தது அதுவல்ல.

அந்த இணையத் தளம் 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னர்களின் வாரிசாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள கனகராஜா கடந்த நான்கு ஆண்டுகளாக உலகம் முழுவதிலும் உள்ள மன்னர் குடும்பங்களுடன் குறைந்த பட்சம் எழுத்து மூலமாகவாவது தொடர்புகளைப் பேணிக் கொண்டிருக்கின்றார். யாழ்ப்பாண மன்னர் பரம்பரையின் இளவரசர் என்ற வகையில் அந்தத் தொடர்புகள் பேணப்படுகின்றன என்பதை அவரது இணையத் போடப்பட்டுள்ள இணைப்புகளில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. யாழ்ப்பாண இராஜ்ஜிய வரலாறு மன்னர் பரம்பரையினர் படங்கள் (பார்த்தால் நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்தவர்கள் என்பதற்கு மேல் மதிக்க முடியாதுள்ளது) என்று பல விடயங்கள் அதில் காணக்கிடைக்கின்றது.

ஆனால் எந்த மக்களுக்கு மன்னராக இருந்தவர்களின் வாரிசு என்று தன்னைக் கூறிக்கொள்கிராறோ அவர்கள் பற்றி சிஞ்சித்தும் கவலைப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் அந்த இணையத்தில் இல்லை. தனிநாட்டுக்கான போராட்டம் ஒன்று நடந்துகொண்டிருக்கும்போது இழந்துபோன தனது ராஜ்ஜியம் பற்றிக்கூட அவர் கொஞ்சம்கூடக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அடுத்த நாட்டு மன்னர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து அனுப்புவதிலும் இறப்புக்கு துயர் தெரிவிப்பதிலுமே தனது இளவரசர் கடமை முடிந்து விட்டதாக அவர் நினைத்து விட்டார் போலுள்ளது. (அவரது இணையம் தரும் தகவல்கள் அவ்வளவுதான்)

முன்னர் அவரது மூதாதையர்கள் (வாரிசு என்பது உண்மையாக இருந்தால்) இருந்து அரசாண்ட நல்லூர் மண்ணில் இன்று நாளாந்தம் எத்தனை உயிர்கள் 'இனந்தெரியாத துப்பாக்கிகளுக்குப்' பலியாகின்றன? சுற்றிவர எழுந்து நிற்கும் பயங்கர ஆயுதங்களுக்கு மத்தியில் அந்த மக்கள் எவ்வளவு துயரப்படுகின்றார்கள். தங்கள் இருப்பை உறுதிப்படுத்த மூச்சைக்கூட ஆயுத முனைகளின் அனுமதி பெற்றே வெளியிடவேண்டியிருக்கிறதே அது பற்றி அவர் சொட்டுக்கூடக் கவலைப்படவில்லை. இதே மக்களை அன்று வெள்ளையர்களிடம் இருந்து காப்பதற்காக யாழ்ப்பாணத்து மன்னர்கள் போராடினார்கள் என்பதாவது தெரியுமா இவருக்கு? அந்தப் பரம்பரையில் வந்திருந்தால் புரட்சியின் சிந்தனை கொஞ்சமாவது ரத்தத்தில் கலந்திருக்கவேண்டுமே? ஆனால் எதையும் காணோம்.

அவருடைய மொழியில் 'இராஜதந்திர ரீதியிலான மன்னர் உறவுகளுக்கு' அப்பால், தான் எந்த நாட்டு மக்களின் மன்னராக இருந்தவர்களின் வாரிசு என்று உரிமை கொண்டாடுகிறாறோ அவர்கள் மீது குறைந்தபட்ச அக்கறையாவது தேவை. அப்படி இல்லையாயின் உரிமை கொண்டாடும் தார்மீகம் கூட அவருக்குக் கிடையாது. முதலில் உங்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் அவர்கள் கஷ்டங்களில் பங்கெடுங்கள் அவர்கள் துயரங்களை பகிர்ந்துகொள்ள அவர்களுக்குக் கடிதம் எழுதுங்கள் அவர்களின் துயரங்களில் கூட இருங்கள். பின்னர் மற்றைய மன்னர்களுடன் கடிதத் தொடர்புகளைப் பேணலாம்.

யாழ்ப்பாண மன்னர் பதவி என்பது தெய்வம் கொடுத்த கொடையல்ல. அது அந்த மக்களால் கொடுக்கப்பட்ட கௌரவம். அதற்குத் தகுதியாக வேண்டுமாயின் இளவரசர் என்று (யார் கொடுத்த பட்டமோ தெரியாது) தன்னை அழைத்துக்கொள்வது மட்டும் போதாது.

'ஈயத்' தமிழர்கள்

எனக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் சில நண்பர்கள் இருக்கிறார்கள். 24 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள். துடிதுடிப்பும் சுறுசுறுப்பும் உள்ளவர்கள் என்பதுடன் படிப்பில் கெட்டிகளும் கூட. விடயம் என்ன வென்றால் அவர்களில் ஒருவர் நேற்று என்னிடத்தில் கேட்டார் ''எங்கள் ஈயத் தமிழ் மக்கள் எப்படி இருக்கிறார்கள்'' என்று. அவர் வாய்தவறி ''ஈயத் தமிழர்கள்'' உச்சரிக்கவில்லை. உண்மையிலேயே அவருக்கு அப்படித்தான் தமிழ் தெரிந்திருந்தது. மற்றொருவர் என்னிடத்தில் கேட்டார் 'சிலோன்' என்பது 'சிறீ லங்கா'விற்குள் இருக்கும் ஒரு இடமா? என்று.

ஒருபுறத்தில் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார் பழ நெடுமாறன். மற்றொரு புறத்தில் இளைஞர்கள் சிலருக்கு ஈயமா ஈழமா என்பதும் தெரியவில்லை. சிலோனுக்கும் சிறீலங்காவிற்கும் வித்தியாசமும் புரியவில்லை. என்ன குஷ்டமடா, (சாரி அவர்கள் மாதிரியே வந்துவிட்டது) கஷ்டமடா சாமி!

யாழ்ப்பாணம் : 40000

இன்றைய கணனி உலகில் Postal Codes எனப்படும் தபால் குறியீட்டு இலக்கங்கள் மிகவும் அவசியமானது. இணையத்தில் நீங்கள் எந்தப் பதிவை மேற்கொண்டாலும் (குறிப்பாக இலவச பொருட்களைப் பெற) இந்தக் குறியீட்டு இலக்கங்களை கட்டாயம் கேட்பார்கள். மேற்கு நாடுகள் மற்றும் கொழும்பு போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே இத்தகைய இலக்கங்களை வைத்திருப்பார்கள் என்றே நானும் இதுநாள் வரை எண்ணி இருந்தேன்.
இன்று கூகிள் இணையத்தில் ஒரு பதிவை மேற்கொள்வதற்தாக எனக்கு யாழ்ப்பாணத்தின் Postal Codes தேவைப்பட்டது. பல தடவைகள் அந்தப் பகுதியை வெற்றிடமாக விட்டு விண்ணப்பத்தை அனுப்பிய போதும் அது பூரணமாகவே இல்லை. திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தது. நண்பர்களிடமும் கேட்டுப்பார்த்தேன் அவர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. இத்தனைக்கும் அவர்களும் பத்திரிகையாளர்கள் வேறு.

இணையத்தில் தேடிப்பார்ப்போம் என்ற எண்ணம் திடீரென தற்செயலாகத் தோன்றியது. தேடியபோது ஆச்சரியம். இலங்கையின் அனைத்து நகரங்களுக்குமான அனைத்து Postal Codes வந்து விரிந்தன. அதில் யாழ்ப்பாணத்திற்கான இலக்கம் 40000 என்று இருந்து. இனிமேல் இணையத்தில் உங்கள் ஊரின் Postal Codes கேட்டால் உடனே கொடுத்து விடுங்கள். இங்கே சில தமிழ் ஊர்களின், நகர்களின் Postal Codes கீழே தருகின்றேன்.
மன்னார் : 41000
முல்லைத்தீவு : 42000
வவுனியா: 43000
அம்பாறை : 32000
அட்டாளைச்சேனை : 32350
அக்கரைப்பற்று : 32400
ஏறாவூர் : 30300
களுவாஞ்சிக்குடி : 30200
மாங்கேணி : 30442
வாழைச்சேனை : 30400
சீனன்குடா : 31050
ஈச்சிலம்பற்றை : 31236
கந்தளாய் : 31300
கண்ணியா : 31032
சம்பூர் : 31216
தம்பலகாமம்: 31046
இன்னும் எவ்வளவோ தமிழ் ஊர்களின் Postal Codes உள்ளன. தேவையானவர்கள் இணையத்தை நாடுங்கள்.

மிரட்டலான வெற்றி!

கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி எடுத்த படங்களே கவிழ்ந்து போய்விடுகின்ற தமிழ் சினிமாவில் வெறும் 2 லட்சம் ரூபாவில் எடுக் கப்பட்ட ஒரு 90 நிமிடபடம் திரைக்கு வராமலேயே சக்கை போடு போடுகின்றது என்றால் நம்ப முடிகின்றதா? எஸ்ஆர்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தகவலியல் (Visual communication), மின்னணு ஊடகவியல் (Electronic media) துறைகள் இணைந்து இதனைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.

1970களில் அமெரிக்காவில் ஜேன் வெய்ன் கீஸ் என்ற தொடர் கொலைகாரன் 33 பேரைக் கொன்றான். அவன் ஓரினச் சேர்க்கையாளன். இளை ஞர்களை தந்திரமாக அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத் திய பின்னர் கொல்வது அவன் பாணி. அந்த உண்மைக் கதையை மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர்இ இன்றைய காலத்துடன் ஒன்றிப் போகக்கூடியதாகக் கொடுத்திருக்கிறார்கள்.

பாலியல் பற்றிப் பேசுவதற்கே பயப்படும் ஒரு சமூகத்தின் மத்தியில் அப்படிப் பேசுவதை குற்றமாகக் கருதும் மக்கள் மத்தியில் ஓரினச் சேர்க்கை பற்றிப் பேசுவதற்கு அசாத்திய துணிவு வேண்டும். அந்தத் துணிவுடன் அதை எதிர்கொண்டு விறுவிறுப்பான ஒரு துப்பறியும் கதையைப் படமாக்கி இருக்கிறார்கள்.

வங்கியில் கொள்ளையடிக்க முயலும் நான்கு பேரை சுட்டுக் கொல்லும் அதிரடியான காவல்துறை அதிகாரியின் அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறது படம். சிறப்பு தனிப்படையைச் சேர்ந்த அந்த அதிகாரியின் தான்தோன் றித்தனமான நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தாலும் அவரது திறமை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள் உயர் அதிகாரிகள்.

சென்னையில் திடீரெனக் இளைஞர்கள் தொடர்ந்து காணாமல் போ­வது பற்றிய விவகாரம் இந்தக் தனிப்படையிடம் விசாரணைக்காக ஒப் படைக்கப்படுகிறது. வழக்கமான தமிழ் சினிமாவின் பழிவாங்கல்இ அடிதடிஇ 'ஹீரோயிஸம்' என்பவற்றை எல்லாம் தாண்டி குற்றவாளியை எப்படி விஞ்ஞான முறைப்படி கவ்விப் பிடிக்கலாம் என்று சொல்லித் தருகிறது படம்.
முழுவதும் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையில் (முக்கிய குற்ற வாளியின் வேலைக்காரன் விடயத்தில் சாதாரண பொலிஸ்காரர் வேலையை அவர்களும் காட்டுகின்றனர்.) குற்றவாளி நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதுதான் கதை.

குற்றவாளி பெரிய தொழிலதிபர். இளைஞர்களைக் கடத்தி ஓரினச் சேர்க் கைக்கு உட்படுத்திய பின்னர் கொலை செய்கிறார். சகோதரியும் வேலைக்காரனும் இவனுக்கு உடந்தை.

தமிழ் சினிமாவின் 'சஸ்பென்ஸே' இல்லாமல் படத்தின் நடுப்பகுதிக்கு முன்பாகவே குற்றவாளி அடையாளம் காட்டப்பட்டு விடுகின்றான். அவனைக் குறிவைக்கும் பொலிஸ் ஆதாரங்களைத் திரட்டி எப்படி அவனை நீதியின் முன் நிறுத்துகின்றது என்பதுதான் மீதிக் கதை.

கல்லூரியின் பேராசரியர்களும் விரைவுரையாளர்களும் தொழில்நுட்ப உதவியாளர்களும் மாணவர்களுமே இந்தத் திரைப்படத்தில் எல்லாமும். 70 வீதமான படம் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக சூழலிற்குள்ளேயே பட மாக்கப்பட்டுள்ளது.

மிகக் குறைந்த வளங்களைக் கொண்டு தரமான ஒரு படைப்பைத் தந்திருக்கிறார்கள். தமிழ் சினிமாத் துறையினர் தொடுவதற்கே பயப் படும் ஒரு விடயத்திற்குள் புகுந்து விறுவிறுப்பாக ஒன்றரை மணிநேரப் படத்தைத் தந்திருப்பதில் அவர்களுக்கு முழு வெற்றி.

வெளியிட்ட ''சில மாதங்களில் 10இ000 பிரதிகள் விற்றுள்ளன'' என்கிறார் பேராசிரியர் அம்ரித்ராஜ். எஸ்ஆர்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் தொடர்பியல் துறையின் தலைவர் அவர். ''சும்மா சம்மர் லீவில ஒரு படம் பண்ணலாம்னு புறப்பட்டோம். இப்போது அது இவ்வளவு பெரிய விஷயமாயிடிச்சு'' என்கிறார் பூரிப்புடன். (கீழே பார்க்க அவரது பேட்டி)
இந்தப் படத்திற்கு எல்லாப் பத்திரிகைகளும் இணையத் தளங்களும் பாராட்டை வாரிக் குவித்திருக்கின்றன. 45 பத்திரிகைகளில் விமர்சனங் கள்இ கட்டுரைகள்இ செய்திகள் வெளிவந்திருக்கின்றன. வெளிநாட்டு இணையத் தளங்கள் உட்பட பல தளங்கள் வித்தியாசமான முயற்சி என்று பாராட்டி ஆக்கங்கள் வெளியிட்டுள்ளன.

இந்தக் கதையையே ''சினிமாவா எடுத்திருந்தா 3 கோடி ரூபா லாபம் பாத்திருப்பேன் சார்'' என்று ரஜனியின் 'சிவாஜி' படத்தை சென்னையில் வெளியிட்ட விநியோகத்தர் அபிராமி ராமநாதன் தெரிவித்திருக்கிறா ராம்.
6 மாதங்களா பட்ட கஷ்டங்களுக்கு கிடைத்த பயன் இது என்கிறார் பேரா சிரியர் பாலாஜி. ''காலேஜையே கட்டிக் கிட்டு அழுங்க'' என்று வீட்டி லுள்ளவர்கள் எல்லாம் சண்டைபோடப்போட நாங்கள் பட்ட கஷ்டத் திற்கு எங்களுக்கு முழு வெற்றி கிடைத்திருக்கிறது என்கிறார். இவர்தான் படத்தின் முக்கிய கதாபாத் திரத்திலும் நடித்துள்ளார். (கீழே பார்க்க அவரது பேட்டி)
உலகின் இரண்டாவது இறுவட்டு (CD) தயாரிப்பு நிறுவனமான மோஸ பியர் இந்தப் படத்தை இறுவட்டுக்களாக வெளியிட்டுள்ளார்கள். இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள திரைப்படமல்லாத ஒரே படமும் இது தானாம். உலகெங்கிருக்கும் தமிழர்களும் இணையத்தின் மூலம் இதனை வாங்கிக்கொள்ள முடியும்.

ஓரினச் சேர்க்கை பற்றி இந்தியச் அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள பிரிவு 377 என்பதையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளார் கள். கமராவைப் பார்த்து விரல் நீட்டி ஆவேசமாக வாய்ச் சவடால் விடும் ஹீரோக்களுக்கு மத்தியில் சாதாரண உரையாடல்கள்இ இயல் பான நடிப்பு என்று அசத்தியிருக்கிறார்கள். அத்தோடு மக்களையும் கவர்ந்திருக்கிறார்கள்.
படத்தின் உச்சக்கட்டத்தில் குற்றவாளி தனக்கு 'மள்டிபிள் பர்ஸனா லிட்டி டிஸார்டர்' இருப்பதாகவும் அதனால் தன்னை மன்னிக்கும்படியும் மன்றாடி னாலும் தண்டனை வழங்கப்படுவதாகக் காட்டிப்பட்டிருப்பது சிறந்தது.
அதேசமயத்தில் குற்றவாளிக்கு உடந்தை யாக இருந்த அவரது சகோதரி போதிய சாட்சிகள் இல்லாததால் விடுவிக்கப்படுகிறார். சாட்சிகள் இல்லாத தனால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை என்றாகிவிடுமா என்ற கேள்வியை இங்கு இயக்குனர் முன்வைக்கிறார். அதன் மூலம் கதைக்கு ஒரு திறந்த முடிவையும் கொடுத்திருக்கிறார்.

திடீர் திருப்பங்களோ அதிரடியான மாற்றங்களோ இல்லாமல் படம் ஒரே சீராகச் சென்றிருப்பது சிறிது சோர்வைத் தந்தாலும் தமது வித்தியாசமான அணுகுமுறைகளால் வெற்றி பெற்றிருக்கிறார்கள் இயக்குனரும் நடிகர்களும்.
அதிகம் பேசப்படாத ஒரு விடயத்தை எடுத்து சிறப்பாகக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கும் எஸ்ஆர்எம் பேராசிரியர்கள்இ மாணவர்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள்.

தொலைக்காட்சிப் படங்களுக்கான வழியையும் அவர்கள் இப்போது திறந்து விட்டுள்ளார்கள். வருங்காலத்தில் இதுவே ஒரு பெரும் வர்த்த கமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நடிகர்கள்தான் எமக்குப் பெரிய சாவால்!
(பேராசிரியர் அம்ரித்ராஜ் ஞானம் அவர்களுடனான செவ்வி.)

? : இப்படி ஒரு படம் பண்ணும் எண்ணம் எப்படி வந்தது?
! : மாணவர்களுக்குப் பாடத்தை கற்றுக் கொடுப்பதை மட்டும் செய்வதைவிட செய்முறையாகக் காட்டுவது பயனுள்ளது என்று சிந்தித்தோம். அதன் விளைவே இந்தப் படம். அனுபவம்தான் எப்போதுமே பயனுள்ள கற்கை. அதுவே நிலைத்தும் நிற்கும்.

? : எத்தகைய சவால்களை எதிர்கொண்டீர்கள்?
! : நடிகர்கள்தான் எமக்குப் பெரிய சவால். பாலாஜியைத் தவிர யாருக்கும் நடிப்பில் பயிற்சியோ தேர்ச்சியோ இல்லை. அதைச் சரிப்படுத்த 'மெதேட் அக்டிங்' எனப்படும் யதார்த்த நடிப்பு முறை யைப் பின்பற்றி னோம். மற்றவர்கள் பேசவே பயப்படும் கதையில் நடிப்பதற்கு பலரும் பயந்தனர். அது இரண்டாவது பெரிய பிரச்சினை. தமது பெயர் கெட்டு விடும் என்று அவர்கள் அஞ்சினர். நடித்த சிலர் இடையில் விலகினர். கெஞ்சிக் கூத்தாடி இறுதிக் கட்டப் படப்படிப்பை நடத்திய நிலையும்கூட உண்டு. மற்றப்படி பல்கலைக்கழகத்தில் எம்மிடம் இருந்த உபகரணங்களையும் வசதிகளையும் கொண்டே படத்தை முடித்துவிட்டோம்.

? : படத்தைத் தயாரிக்க எவ்வளவு காலம் சென்றது?
! : 2004ஆம் ஆண்டு மே மாத ஆரம்பத்தில் ப+ஜை போட்டோம். நவம் பருக்குள் 60 வீதமான படத்தை முடித்து விட்டோம். மீதியை முடிப்ப தற்கு 6 மாத காலம் இழுத்து விட்டது. கோடை விடுமுறைக் காலம் என்பதால் முதல் பாதி விரைவில் முடிந்தது. கல்லூரிகளின் கற்கை நெறிக்கு மத்தியில் மிகுதியை முடிக்க வேண்டி இருந்ததால் அதிக காலமானது. மாணவர் கற்றலைப் பாதிக்காமல் கல்லூரி முடிந்த பின் னரே எமது வேலையைத் தொடர்ந்தோம்.

? : எவ்வளவு பணம் போட்டீர்கள்?
! : எல்லாச் செலவுகளுக்குமாக 2 லட்சம் ரூபா போயிருக்கும். ஆனால் அதற்கும் மேலான பணம் விற்பனை மூலம் எமக்குத் திரும்பக் கிடைத் துள்ளது. அதுதான் வெற்றி.

? : இத்தகைய ஒரு புதிய முயற்சிக்கு வரவேற்பு எப்படி?
! : முதலில் தொலைக்காட்சிகளை அணுகினோம். அவர்கள் படத்தை வெளியிடத் துணியவில்லை. பின்னர் 'மோஸபியர்' நிறுவனத்தை அணுகினோம். அவர்கள் மும்பைக்காரர்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஆர்வத்துடன் பெற்று வெளியிட்டார்கள். இப்போது விற் பனையில் சக்கைபோடு போடுகிறது. அதில் ஒரு பங்கு எமக்குக் கிடைக்கும். அதற்கான 'செக்'குகள்கூட எமக்கு வர ஆரம்பித்து விட்டன. இதுவரை 10இ000 மேற்பட்ட பிரதிகள் விற்றுத் தீர்த்து விட்டன.

சினிமாவுக்கு அழைக்கிறார்கள்!
எஸ்ஆர்எம் காட்சித் தகவலியல் மற்றும் மின்னணு ஊடகவியல் துறை இணைப்பாளர்இ நடிகர் பாலாஜி அவர்களுடனான செவ்வி.

? : இப்படி ஒரு பாத்திரத்தை செய்ய எப்படித் துணிந்தீர்கள்?
! : எல்லோரும் செய்ததையே செய்ததைவிட வித்தியாசமாகச் செய்வதில்தானே சவாலே இருக்கின்றது.

? : எத்தயை சவால்களை எதிர்கொண்டீர்கள்?
! : எனது பாத்திரம் எப்படி இருக்கும் என்று ஆய்வு செய்வதற்கு அல்லது பார்ப்பதற்கு எதுவுமே இருக்கவில்லை. இத்தைகைய ஒரு நடிப்பை இதற்கு முன்னர் எந்த நடிகரும் வெளிப்படுத்தி இருக்கவில்லை. அதுவே எனக்குப் பெரிய சவால். நானே தேடினேன். அரவாணிகளைக் கூர்ந்து கவனித்து அவர்களிடமிருந்து சில பாவங்களை எடுத்தேன். அந்தப் பாத்திரத்தை கச்சிதமாகவும் ஆபாசமில்லாததாகவும் கொண்டு வருவதற்கு மிகச் சிரமப்படவேண்டியிருந்தது.

? : நடிக்கும் போது எப்படி இருந்தது?
! : ஓரினச் சேர்க்கை பற்றிய காட்சி எடுத்தபோது அந்த அறையில் ஒளிப்பதிவாளர் உட்பட 4 பேருக்கு மேல் இருக்கக்கூடாதென ஆரம் பத்திலேயே சொல்லிவிட்டேன். ஒளிப்பதிவாளரைக் கூட தூரத்தில் இருந்து 'டெலி லென்ஸ்' மூலம் எடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். என்பக்கத்தில் யாரும் இருப்பதான உணர்வு எனக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக.

? : படம் வெளியான பின்பு வரவேற்பு எப்படி இருந்தது?
! : சில இடங்களில் பாத்திரமாகவே பார்த்தார்கள். கிண்டலடித்தார்கள். சினிமா வட்டாரங்களில் நிறையவே பாராட்டினார்கள். கமல் 'வேட்டை யாடு விளையாடு' எடுத்தபோது அதற்கு முன்னர் இந்தப் படத்தைப் பார்க்குமாறு தயாரிப்பாளர் ஒருவர் அவரிடம் கூறினார் என்றும் அறிந்தோம்.

? : இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏதாவது சினிமா வாய்ப்புக்கள் வந்த னவா?
! : ஆமாம். (சந்தோஷமாகச் சிரிக்கிறார்) 'அரசி' தொடரில் ஏற்கனவே 3 'எபிசோட்களில்' வந்திருக்கிறேன். விரைவில் வெளிவர இருக்கும் 'காலைப்பனி' என்ற திரைப்படத்தில் கல்லூரிப் பேராசிரியராக நடித் திருக்கிறேன். 'சமுத்திரக்கனி' என்ற படத்திலும் நடித்திருக்கிறேன். வேறு பல படவாய்ப்புக்களும் வருகின்றன.

? : எப்போது ஹீரோ ஆகிறீர்கள்?
! : (வாய்விட்டுப் பெரிதாகச் சிரிக்கிறார்) ஐயையோ அதெல்லாம் வேண் டாம். கதாநாயகன் ஆகிவிட்டால் ஒரு வட்டத்திற்குள் நின்றே நடிக்க வேண்டியிருக்கும். வேறுவேறுவேறு கதாபாத்திரங்கள் செய்யம்போது நடிப் பிற்கு நிறையத் தீனி கிடைக்கின்றது.

? : படத்திற்கு திறந்த முடிவு (Open end) கொடுத்திருக்கிறீர்களே மற் றொரு படமும் வருமா?
! : வழக்கமாக தமிழ் படங்களில் சுபம் போட்டு முடிப்பார்கள். அதி லிருந்து வித்தியாசமாக இருக்கட்டுமே என்று அப்படிச் செய்தோம். ஆனாலும் 377 பகுதி II எடுக்கும் யோசனையும் இருக்கிறது.

உலகத்தால் கைவிடப்பட்டவர்கள்!

அருகே நெருங்க முடியாதளவிற்குத் தூக்கியடிக்கும் துர்நாற்றம். அந்த நகரத்தின் முழுக் குப்பை களும் அங்கேதான் கொட்டப்படுகின்றன. சில மணித் துளிகள் அப்பகுதியில் நின்றாலேயே தொற்று நோய்க்கு ஆளாகிவிடுவோமோ என்று அஞ்சி நடுங்கவைக்குமளவிற்குப் பயங்கரமான சூழல். அதற்கு மத்தியில் வெய்யில் மழை எதற்கும் ஈடுகொடுக்க முடியாததொரு குடிசை, அதற்குள் ஒரு வாழ்க்கை. கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

மனிதர்களால் நினைத்தே பார்க்க முடியாத அந்தச் சூழலுக்குள்தான் இந்த உலகத்தால் கைவிடப்பட்ட மக்கள் கூட்டத்தினரில் ஒரு பகுதியினர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தம்மைச் சூழ்ந்துள்ள பயங்கரங்களில் எதைப்பற்றிய பிரக்ஞையும் இன்றி, குண்டுச் சத்தங்களும் இராணுவக் கொடுமை களும் அற்ற ஒரு வாழக்கை மட்டுமே வேண்டும் என்பதற்காக இந்தக் குப்பை மேட்டுக்கு நடுவே அவர்களது வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. கந்தகநெடியிலிருந்து தப்பி வந்து அதைவிடக் கோரமான நெடிக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த மக்களை எவரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

மியன்மார் என்று இப்போது அழைக்கப்படும் பர்மாவின் ஒரு இனப் பிரிவினர் எல்லை தாண்டி வந்து தாய்லாந்தில் படும் துயரத்தின் சிறு உதாரணம்தான் இது.

தனித்துவ அடையாளங்களைக் கொண்ட பல இனங்கள் வாழும் ஒரு நாடு பர்மா. ஆளும் அதிகார வர்க்கமாக இருக்கும் பேர்மியர்கள் அங்கு பிரதான இனத்தவர்கள். அதேசமயம் கச்சின் (Kachin), ஷான் (Shan), கரேனி அல்லது கயா (Karenni- Kayah), கரேன் (Karen), சின் (Chin), அரகன் அல்லது ரகைங் (Arakan – Rakhaing) மற்றும் மொன் (Mon) ஆகிய இனங்களைச் சேர்ந்தவர்களும் வாழ்கின்றனர்.

பொதுவாக மிலேச்சத்தனமான இராணுவ அரசு என்று சமாதான ஆர்வலர்கள் அனைவராலும் குறிப்பிடப்படும் ஆட்சியே இன்று பர்மாவில் நடக்கிறது. அவர்களுக்கு எதிராக ஜனநாயகத்தை நிலைநிறுத்தப் போராடிவரும், நோபல் சமாதானப் பரிசு பெற்றவரான ஆங்சான் சூகி, தொடாந்து நீண்ட காலமாகப் போராடிக்கொண்டே இருக்கின்றார். இராணுவ அரசு அவரை நசுக்கிவிட தன் னால் இயன்ற அனைத்தையும் செய்துகொண்டே இருக்கின்றது. ஆனாலும் அதிகார பூட்ஸ்களை மீறி அவர் வாழ்ந்து கொண்டும் தம் மக்களுக்கு நம்பிக்கை அளித்துக்கொண்டும் இருக்கிறார்.

மியன்மார் அரசு தனது நாட்டில் ஜனநாயகத்தை மட்டும் நசுக்கிவிடவில்லை. சிறுபான்மை மக் களின் உரிமைகளையும்கூட தன் இராணுவ நலன்களுக்காக மறுக்கிறது. “அங்கே நாங்கள் மனிதர் களுக்குரிய சாதாரண அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்ட நிலையில்தான் வாழ்கின்றோம்” – என்கிறார் தாய்லாந்தில் அகதியாக இருக்கும் ஒருவர்.

இராணுவங்கள் உலகில் எங்கும் ஒரே மாதிரியானவையாகத்தான் இருக்கின்றன. பர்மாவில் அதன் முழுப் பரிமாணத்தைப் பார்க்கலாம் என்கிறார்கள். கற்பழிப்புக்கள், கடத்தல்கள், விசாரணைகளற்ற கொலைகள் எல்லாமே சிறுபான்மையினத்தவர்களின் பிரதேசங்களில் தாராளம். இராணுவ அதிகாரி கள் குறுநில மன்னர்கள் போன்று செயற்படுமளவிற்கு அங்கு சட்டம் ஒழுங்கு நிலைமைகள் இருக் கின்றன என்று கூறப்படுகின்றது. அவர்கள் வைத்ததுதான் சட்டம், அவர்கள் நினைத்தால் எதையும் செய்யலாம். பெண்களைப் பலாத்காரப்படுத்தலாம், ஆண்களைப் பிடித்துச் செல்லலாம் கொல்லலாம் எதுவும் செய்யலாம். நீதி விசாரணைகளோ தண்டனைகளோ கிடையாது. (இன்றைய ஆட்சியில் இலங்கையின் நிலையும் இதை ஒத்தது போன்றுதானே இருக்கின்றது)

போதாக்குறைக்குப் பர்மாவின் பொருளாதரம் வேறு கீழ்நிலையில் இருக்கிறது. சிறுபான்மை இனத் தவர்களுக்கோ தொழில் செய்வதற்கான எந்த மார்க்கமும் இல்லை. விவசாயம்கூட மழையை நம்பி இல்லை இராணுவத்தை நம்பியே இருக்கின்றது. கதிர் முற்றி அறுவடைக்குத் தயாராக இருக்கின்ற போது, அவர்கள் விரும்பினால் முழு வயலுக்குமே தீ வைப்பார்கள் என்கிறார் கவலையுடன் ஒரு விவசாயி.

இந்த நிலைதான் லட்சக்கணக்கான மக்களை தமது சொந்த இடங்களைவிட்டு வெளியேறி வெடி குண்டுச் சத்தங்களற்ற, இராணுவக் கெடுபிடிகளற்ற ஒரு மண்ணைத் தேடி ஒட வைக்கின்றது. அமைதியையும் நிம்மதியையும் மட்டும் எதிர்பார்த்தே அவர்கள் தாய்லாந்து மண்ணை மிதிக் கிறார்கள். அங்கே அவர்களுக்கு வேறு எதுவுமே கிடைப்பதில்லை. மிக மிக ஆபத்தான – கண்ணி வெடிகள் நிரம்பிய பகுதிகளைக் கடந்து – காடுகள் நிறைந்த மலைகளைத் தாண்டி எல்லையைக் கடக்கிறார்கள். இப்படி சுமார் 6 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் தாய்லாந்திற்குள் தஞ்சமடைந்திருக் கிறார்கள் என்கிறார் எல்லைப் பகுதி நகரான மேசோடிலுள்ள (Mea sot) அகதிகளுக்கான ஐ.நா. தூதரக அதிகாரிகளுள் ஒருவரான குள் தொங்லிம் (Kul Thonglim)

பர்மாவில் இருந்து தாய்லாந்து வருபவர்களில் மூன்று விதமானவர்கள் இருக்கின்றார்கள். ஒரு பகுதியினர் அகதி அந்தஸ்துக் கோரி அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்கள். தாய்லாந்து அரசு இவர்களுக்கென மூன்று அகதி முகாம்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அந்த முகாம்களுக்கு வெளியே எங்கும் இவர்கள் செல்ல முடியாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரண் டாவது பகுதியினர் தொழில் அல்லது வருமானம் தேடி வருபவர்கள். இவர்கள் தம்மை அகதிகளா கப் பதிவு செய்துகொள்வதில்லை. அவ்வாறு பதிவு செய்துகொண்டால் வருமானம் தேடி வெளியே செல்லமுடியாது என்பதனால் அவர்கள் இவ்வாறு செய்வதில்லை. மூன்றாவது வகையினர் தாய் லாந்து எல்லையோரம் பர்மாவிற்குள்ளேயே காடுகளுக்குள் இருக்கும் உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்தோர்.

இவ்வாறு பல தரப்பட்டவர்கள் இருப்பதாலும் அவர்களும் ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருப்பதாலும் பர்மாவில் இருந்து தாய்லாந்திற்குள் வந்திருப்பவர்களின் சரியான எண்ணிக்கையைக் கணக்கிட முடியவில்லை என்கிறார் தொங்லிம். எனினும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பதியப்பட்ட அகதிகளாக இருக்கின்றார்கள். இவர்களில் 50 ஆயிரம் பேர் வரையிலா னோர் வசிக்கும் அகதி முகாம் - இது மெலான் முகாம் எனப்படுகின்றது, பர்மா – தாய் எல்லை யோரமே அமைக்கப்பட்டிருக்கின்றது. வெறும் மரங்களாலும் தேக்குபோன்ற ஒரு வகை மரத்தின் இலைகளைக் கொண்டு செய்யப்பட்ட கூரைகளாலும் அமைக்கப்பட்ட சிறு குடிசைகளில் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த முகாம்களைவிட்டு அவர்கள் வெளியே செல்ல முடியாது. அவ்வாறு சென்றால் பொலீஸா ரால் கைது செய்யப்படுவார்கள். மிகப் பெரிய திறந்தவெளிச் சிறைச்சாலை போன்று மலையடி வாரத்தில் அமைந்துள்ளது இந்த முகாம். அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் நிய+ஸிலாந்து போன்ற நாடுகள் இந்த அகதிகளைத் தமது நாடுகளுக்கு அழைத்துக்கொள்ளத் தயாரென அறிவித் திருக்கின்ற போதும் அதில் இந்த மக்கள் நாட்டம் கொள்ளவில்லை. அவர்கள் தமது சொந்த இடங் களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றே கேட்கிறார்கள். சுமார் 10 ஆயிரம் பேர் வரையிலான அகதிகள் மட்டுமே வேறு நாடுகளுக்குச் செல்ல விண்ணப்பித்தள்ளனர் எனகிறார் தொங்லிம். கடந்த 8 ஆண்டுகளாக பர்மா அகதிகளுடன் பணியாற்றி வருபவர் இவர்.

பர்மா அகதிகளை விடவும் துன்பங்களைச் சுமந்து வாழ்பவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள். (Micrent) இவர்கள் தாய்லாந்து அரசினால் அங்கீகரிக்கப்படாத வர்க்கத்தைச் சேர்ந்தோர். பர்மாவில் செய்வதற்குத் தொழில் வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் வருமானம் தேடி எல்லை தாண்டும் இவர்கள் மே சோட் நகரில் உள்ள தொழில் நிலையங்களில் பணியாற்றுகின்றார்கள். முதலாளிகளால் இவர்கள் பெருமளவில் சுரண்டப்படுவதுடன் துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத் தப்படுகின்றார்கள் என்கிறார் இவர்களுடன் பெருமளவில் பணியாற்றும் லோறி மௌன்ட். வரு மானம் தேடி மே சோட் நகரைக் கடக்கும் பர்மிய இளைஞர்களில் பலர் பாங்கொக் நகரில் பாலி யல் தொழிலில் ஈடுபடும் அவலமும் நடக்கின்றது. அதேசமயம் பர்மிய இளம் பெண்கள் பலர் எல்லையோர நகரங்களில் இருந்து பாலியல் வியாபாரத்திற்காக முகவர்களால் வேறு இடங் களுக்குக் கடத்தப்படும் பயங்கரங்களும் இடம்பெறுகின்றன. ‘வேல்ட் விஷன்’ நிறுவனமும் மற்றும் சில பொது அமைப்புக்களும் இந்த விடயத்தில் பணியாற்றி வருகின்றன.

அகதிகள் அல்லது சட்டவிரோதக் குடியேறிகளுக்கு சலுகைகளையோ பாதுகாப்பான வாழ்க்கை யையோ வழங்கிவிட்டால் அது பார்மாவில் இருந்து மேலும் பலரை தாய்லாந்துக்கு வரவழைத்து விடும் என்பதாலும் அதிகளவில் பர்மியர்கள் எல்லை கடப்பது அந்த நாட்டுடனான உறவுகளில் பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும் என்றும் தாய்லாந்து அரசு கருதுவதனால் சட்டவிரோதக் குடியேறி கள் விடயத்தில் பாராமுகம் தொடர்கின்றது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றின் நிலையும் இதேபோன்றே இருக்கின்றது. அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் அகதிகளுடன் மட்டுமே பணியாற்றுகின்றது. அது சட்டவிரோதக் குடியேறிகள் விடயத்தில் தலையிடுவதே இல்லை. மிகக் குறைந்தளவு அமைப்புக்களே அவர்களுடன் பணி யாற்றுகின்றன. அதில் மீசோ சுகாதார சிகிச்சை நிலையம் முக்கியமானது. டாக்டர் சிந்தியா என்ற பர்மியரே இதனைத் தலைமை தாங்கி நடத்துகிறார். இந்த நிலையமே சட்டவிரோதக் குடியேறி களுக்கு மிகப்பெரிய சேவையை வழங்கி வருகின்றது.

சட்டவிரோதக் குடியேறிகள் என்ற காரணத்தால் பர்மாவில் இருந்து வந்தவர்களுக்கு மே சோட் அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறமுடியாத நிலைமை ஒன்று இருந்தது. ஏந்த அடிப்படை சுகாதார வசதியும் இன்றி அவலப்பட்ட இந்த மக்களின் துயர் துடைப்பதற்காக மீசோ கிளினிக் ஆரம்பிக்கப்பட்டது. இன்று அது ஒரு மாவட்ட வைத்தியசாலைக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு இலவசமாகப் பணியாற்றி வருகின்றது.

நாளாந்தம் சுமார் 200 பேர் வரையிலானோர் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் விசேட அம்சம் என்னவென்றால், இந்த வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவென வருவோர் சில சமயத் தில் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டு பர்மாவுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்படும் ஆபத்து இருக்கின்றது என்பதனால், குடும்பமாகவே அவர்கள் கிளினிக்கிற்கு வருகின்றார்கள். அத்தனை பேரையும் வைத்து பராமரித்து உணவு கொடுத்து அளப்பரிய சேவையாற்றி வருகின்றது மீசோ கிளினிக். இத்தனைக்கும், இந்தக் கிளினி அரசின் எந்த அனுமதியும் இன்றி சட்டவிரோதமாகவே நடைபெறுகின்றது. “மே சோட்டைச் சுற்றி நிறைய சட்டவிரோதக் காரியங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அவை அனைத்தும் மனிதாபிமான நோக்கோடு இடம்பெறுபவை” என்கிறார் டாக்டர் சிந்தியா.

சில அமைப்புக்கள் இவ்வாறு பல சேவைகளை ஆற்றி வருகின்றபோதும் எவரது கவனத்திற்கும் உட்படாமல் இருக்கும் ஒரு பகுதியினரின் சோகங்கள் சொல்லி மாளாதவை. அவர்களில் சிறு பகுதியினரின் நிலைமையையே கட்டுரையின் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.

தாய்லாந்தில் தஞ்சமடைந்த பர்மியர்களில் பலர் சுமார் இரண்டு தசாப்தங்களாக அங்கேயே இருக் கின்றார்கள். அகதிகளாக அல்லது சட்டவிரோதக் குறியேறிகளாக இருக்கின்றார்கள். சிறுவர்களாக வந்த இவர்கள் இப்போது வளர்ந்து பெரியவர்களாகி திருமணம் முடித்திருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகள் எப்போதுமே பர்மா மண்ணை மிதித்ததில்லை அவர்களுக்கு பர்மாவில் எதுவுமே தெரி யாது ஆனாலும் அவர்களும் பர்மியர்கள் என்றே கூறப்படுகின்றார்கள்.

(இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் இந்த வலைப் பதிவில் பார்க்கலாம்.)

ரயிலோரக் கதை - 1

அந்தப் பையன் தலையை வலதும் இடதுமாக தீவிரமாக ஆட்டி தனது தாயுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். பார்ப்பதற்கு சுவாரஸியமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. அவனது மூடிய வலது கையில் இருந்த ரூபா நோட்டை தாய் பறித்து விடுவாளோ என்ற பயத்தில் விரல்களுக்கு இடையில் இறுக்கப் பற்றிப் பிடித்திருந்தான். சாதாரணமாக நின்றுகொண்டிருந்தாள் தாய். ஆனாலும் பையனின் கையிலிருந்த காசைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மென்மையான அணுகுமுறைதான் தெரிந்தது. ஆனால், அவன் அந்தக் காசை தன்னிடம் தந்துவிடவேண்டும் என்ற ஆவல் தெரிந்தது.கையில் வைத்திருந்த குழந்தையுடன் கந்தல் உடையில் இருந்தாள். இளம் வயதுதான். 33 வயது முதல் 35 வயதுக்குள்தான் இருக்கும். மோசம் என்று சொல்லிவிட முடியாதபடிக்கு அழகாக இருந்தாள். ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் அவள் தன் இரு குழந்தைகளுடனும் வந்து ஏறினாள். அவள் பின்னாலேயே இழுபட்டுக் கொண்டு வந்த அந்தச் சின்னப் பையன்தான் இவனது கவனத்தை முதலில் கவர்ந்தான். துறுதுறு என்றிருந்தான். நன்கு பராமரிக்கப்படாததால் ஏற்பட்ட ஒருவித அழுக்கு அவன் மீது படிந்திருந்தது. ஆனால் அதுவும் கூட அவனுக்கு இயல்பான அழகை வழங்கியது.
ரயிலின் வாசலில் இருந்த கூட்டம் சற்றே ஒதுங்கி அவர்களுக்கு வழிவிட்டது. இவனும்கூட அங்கேதான் நின்றிருந்தான். அவர்கள் பெட்டியின் மறுபக்க வாசல் வழியாக ஏறியிருப்பார்கள் போலும். பெட்டியின் நடுப்பாதை வழியே ஊடறுத்துத்தான் இவன் நின்றிருந்த வாசல் பகுதியை நெருங்கினார்கள். தாயின் பின்னாலேயே வந்த சிறுவன் ஒரு தடவை இவனை நிமிர்ந்து பார்த்தான். அந்தப் பார்வையில் ஒரு வித ஏக்கமும் அலட்சியமும் தெரிந்தது. இவனுக்கு எப்போதுமே சிறுவர்கள் மீது விருப்பு இருந்தது. இயல்பாகவே அந்தச் சிறுவனில் கவனம் குவிந்தது. மனது சிந்தனைகளைத் தட்டிவிட்டது.
''இவனுக்குப் பள்ளி செல்லும் வயது வந்திருக்குமா? வறுமை அவன் கல்வி வாய்ப்பைத் தவிர்த்து விட்டதோ? இப்படியே போனால் எதிர்காலத்தில் இவன் என்ன ஆவான்?'' எப்போதும் போலத்தான் இப்போதும் ஒருவித இடதுசாரிப் போக்கில் சிந்தித்தான். ஆனால் ஒருபோதும் அதற்குமேல் அவன் ஒன்றுமே செய்தது இல்லை. இப்போதும் எதையும் செய்து கிழித்தவிடப் போவதில்லை. ஆனாலும் வந்த சிந்தனையைத் தவிர்க்க விரும்பாதவனாக இருந்தவனை அந்தத் தாயின் செய்கைகள் கவர்ந்தன. அவள் வாசலின் நடுப் பகுதியில் கீழே குந்தி அமர்ந்தாள். கூட்டம் இப்போதும் சற்று ஒதுங்கி இடம்விட்டது. ஆனால் அவளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவே இல்லை.
அவர்களுக்கு இது பழக்கமாகிவிட்ட ஒன்று போலிருக்கிறது. தங்கள் பயணத்தின் ஒரு அங்கமாக இதனை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள் போன்றிருந்தது அவனுக்கு. ஆனால் அவனுக்கு இது புதிது. இந்த ரயில் பயணங்களே புதிதானவைதான். இப்போதுதான் இரண்டாவது தடவையாக அவன் இந்த ரயிலில் பயணிக்கிறான். அதனாலோ என்னவோ இந்த விடயம் அவனது கவனத்தை வெகுவாகவே கவர்ந்தது. அந்தச் சிறுவனின் துடுக்குத் தனமும் அழகும் கூட அதற்குக் காரணங்களாக இருக்கலாம். தனது சிந்தனைகளுக்குப் பின்னர் அந்தச் சிறுவனுக்கு ஐந்து வயதுகூட நிரம்பியிருக்காது என்ற முடிவுக்கு வந்திருந்தான் அவன். அவனது சிந்தனைகளை வேறு பக்கத்திற்குத் திருப்பி விட்டது அந்த முடிவு.
தனது கைக்குழந்தையை இடுப்பில் இடுக்கியவாறே குந்தி இருந்த தாய், துணிப் பையில் இருந்து ஒரு சிறிய 'சில்வர்' கிண்ணத்தை வெளியே எடுத்தாள். கூடவே இரண்டு சிறிய தடிகளும். அவள் கையிலிருந்த குல்லாத் தொப்பி ஒன்றை அந்தச் சிறுவன் வாங்கிக் கொண்டான். அதனை அணிந்த பின்னர் தலையை அசைத்துக் கொண்டிருந்தான். அந்தச் சிறு 'சில்வர்' பாத்திரத்தில் தடிகளால் தட்டி ஒரு ரிதத்துடன் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தாள் தாய். உடனடியாக இந்தச் செய்கையை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. கூர்ந்து பார்த்த பின்னர்தான் சிறுவனது தலையில் இருந்த தொப்பியில் ஒரு நூலில் மிகச் சிறிய இருப்புக் குண்டு பிணைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
தாயின் தாளத்திற்கு ஏற்ப அவன் தலையை அசைத்து ஒரு தாளலயத்தில் அந்த இருப்புக் குண்டை சுற்றிக்கொண்டிருந்தான். அவனது வயதிற்கு அது ஒரு சாகச நிகழ்ச்சிதான். அவனது செய்கைகள் இவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தன. விருப்புடன் கண்வெட்டாமல் அவனது செய்கைகளையே கவனித்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்கள் தொப்பியை ஆட்டிக்கொண்டிருந்த சிறுவன் அதை நிறுத்திவிட்டுத் தன் தாய் எடுத்து வைத்த இரும்பு வளையம் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டான். அதனை கால்களுக்கு இடையில் கொடுத்து உடம்பை வளைத்து அதனுள் நுழைத்து வித்தைகள் பல காட்டினான். ரஷ்ய ஜிம்னாஸ்டிக் அழகிகள் தோற்றுவிடுவார்கள் என்று எண்ணினான். வசதிகளும் வாய்ப்பும் இருந்தால் இவனும் ஒருநாள் ஒலிம்பிக் வரை செல்லக்கூடும் என்று இவன் சிந்தித்தபோது, தனது சாகச வித்தைகளை நிறுத்தினான் சிறுவன்.
தாளம் போட்டுக்கொண்டிருந்த அந்த 'சில்வர்' கிண்ணத்தை எடுத்து சிறுவன் கையில் கொடுத்தாள் தாய். அதை ஏந்திக் கொண்டு ஒவ்வொருவரிடமும் நீட்ட ஆரம்பித்தான் அவன். இதுவரை செய்த சாகசத்துக்காக அவன் கேட்ட கூலி அது. ஆனால் பரிதாபம் இவனைத் தவிர வேறு யாருமே அந்தச் சாகசத்தைப் பார்க்கவேயில்லை. இருந்தாலும் பலர் அவனுக்குப் 'பிச்சை' போட்டார்கள். இவன் அவனுக்கு கூலி அல்லது கொடுப்பனவைக் கொடுத்தான்.
அவனுக்குப் பிச்சை போட்டவர்களில் பலர் நகரில் சர்க்கஸ் காட்சி என்றால் ஓடிப்போய் பணத்தை அள்ளிக் கொடுத்துப் பார்ப்பார்கள் என்று நினைக்கையில் இவனுக்கு எரிச்சல் வந்தது. ஆனால் பையனில் எந்த மாற்றமும் இல்லை. அவன் ஒவ்வொருவர் முன்னும் தன் கையிலிருந்த கிண்ணத்தை நீட்டிக்கொண்டிருந்தான்.
பெட்டியின் இறுதி இருக்கை வரிசையில் தந்தையுடன் ஒரு சிறுமி இருந்ததை அவன் அப்போதுதான் கவனித்தான். இந்தச் சிறுவனின் வயதேதான் இருக்கும் அவளுக்கும். அதே உயரம் அதே பருமன் எல்லாமே அவன் மாதிரியேதான். ஆனால் வசதியானவள் என்பது அவளது உடைகளிலிருந்தும் மொளுமொளுப்பிலிருந்தும் பளிச்சிசெனத் தெரிந்தது. தந்தையின் மடியில் அமர்ந்திருந்தாள். பக்கத்தில் இருந்த தாய் அவளை மெல்லத் தன் கைகளால் சுற்றி பாதுகாப்பாகப் பிடித்திருந்தாள். சிறுவன் நெருங்கி வந்தபோது தந்தையிடம் இருந்து 10 ரூபா நோட்டைப் பெற்று அவன் கிண்ணத்திற்குள் போட்டாள் அவள்.
சிறுவனின் முகத்தில் ஆயிரம் சூரியன்களின் பிரகாசம். உடனடியாகவே தாயிடம் திரும்பி வந்தான். ரூபா நோட்டை தன் கையில் எடுத்துக் கொண்டு சில்லறைகளை தாயிடம் கொடுத்தான். அவன் கையிலிருந்த நோட்டைத் தரும்படி தாய் கேட்டாள். அவன் மறுத்தான். அடம்பிடித்தான். கைகால்களை உதைத்துக்கொண்டும் தலையைப் பலமாக ஆட்டிக்கொண்டும் தன் எதிர்ப்பைத் தெரிவித்தான். ஆனால் அந்தத் தாயின் மென்மையும் அவளது கரங்களில் ஒட்டிக்கொண்டு, இங்கு நடப்பது எதுபற்றிய பிரக்ஞையும் இன்றி அமர்ந்திருந்த தங்கையும் அவனைக் கரைத்திருக்க வேண்டும். நோட்டைத் தாயிடம் கொடுத்தான். ஆனால் அவன் மனம் ஆறவேயில்லை. வாழ்க்கையில் முதல் முறை தன் உழைப்புக்குக் கிடைத்த நோட்டை தாயிடம் பறிகொடுத்துவிட்ட வேதனையில் குனிந்த தலையை ரயிலைவிட்டு வெளியே போகும் வரை அவன் நிமிர்த்தவேயில்லை.
மாம்பலம் நிலையத்தை ரயில் நெருங்கியபோது இறங்குவதற்குத் தயாராக தாய் தந்தையுடன் வந்த அந்தச் சிறுமி, சிறுவனை நெருங்கிய போது மீண்டும் ஒருமுறை ஐந்து ரூபாய் நாணயத்தைக் கொடுத்தாள். ஆனால் அவன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ரயில் பெட்டியின் சுவரிற்குள் தன் தலையைப் புதைத்துக் கொண்டிருந்தான். அவன் தாய் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டாள். அதே நிலையத்தில் அவர்களும்கூட இறங்கிக் கொண்டார்கள்.